செய்திகள்

சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிய மனு தள்ளுபடி

Published On 2018-05-01 23:28 GMT   |   Update On 2018-05-01 23:28 GMT
சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #CBSCExam #CBSCPaperLeak
புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொருளாதார பாடத்துக்கு மார்ச் 26-ந் தேதி தேர்வு நடந்தது. ஆனால் தேர்வுக்கு முன்பாகவே அதன் வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த பாடத்துக்கு ஏப்ரல் 25-ந் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.

இதை எதிர்த்து சமூக ஆர்வலர் சஞ்சய் சச்தேவ் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் அந்த குழுவில் இருப்பவர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர்கள் யார்? என கண்டறியாமல் சி.பி.எஸ்.இ. அவசர அவசரமாக மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. ஒரு சில மாநிலங்களில் வினாத்தாள் வெளியானதாக வந்த குற்றச்சாட்டின் பேரின் நாடு முழுவதும் மறுதேர்வு நடத்தியது ஏற்புடையது அல்ல. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.எஸ்.இ. உத்தரவில், கோர்ட்டு தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #CBSCExam #CBSCPaperLeak #tamilnews
Tags:    

Similar News