செய்திகள்
டெல்லியில் தமிழக விவசாயிகள் 4-வது நாளான இன்று கைதட்டி ஓசை எழுப்பும் போராட்டம் நடத்தினர்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் 4-வது நாளாக மோடிக்கு கைதட்டி ஓசை எழுப்பும் போராட்டம்

Published On 2018-03-29 07:24 GMT   |   Update On 2018-03-29 07:24 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று 4-வது நாளாக மோடிக்கு கைதட்டி ஓசை எழுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். #CauveryIssue
புதுடெல்லி:

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பின்பற்றி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்றைக்குள் முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி பாராளுமன்றம் அருகே தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தை கடந்த 26-ந்தேதி தொடங்கினர்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர்.பாண்டியன் தலைமையில் 90 விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளன்று உண்ணாவிரதம் இருந்தனர்.

இரண்டாம் நாளில் தமிழக விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். மூன்றாம் நாளான நேற்று நடந்த போராட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அதன் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே நேற்றைய போராட்டத்தின் போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி சூசை மாணிக்கம் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

போராட்டத்தின் 4-ம் நாளான இன்று தமிழக விவசாயிகள், காதிருந்தும் செவிடராய் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் பிரதமர் மோடிக்கு கைதட்டி ஓசை எழுப்பும் நூதன போராட்டத்தை நடத்தினர். #Tamilnews
Tags:    

Similar News