செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதி - டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் லாலு

Published On 2018-03-28 20:25 IST   |   Update On 2018-03-28 20:25:00 IST
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் உயர் சிகிச்சைக்காக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். #lalu #admitted #aiims
ராஞ்சி:

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவ். பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த இவர் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. 

முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராஞ்சியில் உள்ள பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடை தீவன முறைகேடு தொடர்பான நான்காவது வழக்கில் அவருக்கு சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இதற்கிடையில், ராஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாலுவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் ரத்ததில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்துகொண்டே வந்ததால் உயர் சிகிச்சைக்காக அவரை டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது. இதைதொடர்ந்து, இன்று மாலை ராஞ்சி மருத்துவமனையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு துணையாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், பாதுகாப்புக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 போலீஸ் கான்ஸ்டபிள்களும் உடன் வந்தனர்.

இதுதொடர்பான தகவல் அறிந்ததும் ராஞ்சி ரெயில் நிலையத்தில் லாலுவின் ஆதரவாளர்கள் குவிந்தனர். மாலை 5.30 மணியளவில் ரெயில் நிலைய நடைமேடையில் இருந்து மின்சார கார் மூலம் டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்கும் இடத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டார். 

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஹெச் 1 பெட்டியில் தற்போது பயணித்து கொண்டிருக்கும் லாலு நாளை காலை சுமார் 11 மணியளவில் டெல்லி சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews #lalu #admitted #aiims 

Similar News