செய்திகள்

சட்டசபையில் கவர்னர் உரை மராத்தியில் மொழி பெயர்க்காததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Published On 2018-02-26 19:02 IST   |   Update On 2018-02-26 19:02:00 IST
மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசியதை மராத்தியில் மொழிபெயர்ப்பு செய்யாததால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
மும்பை:

மகாராஷ்டிரா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று தொடங்கியது. கவர்னர் வித்யாசாகர் ராவ் கீழவை, மேலவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். வழக்கமாக ஆங்கிலத்தில் கவர்னர் உரையை வாசிப்பார். அது உறுப்பினர்களுக்கு மராத்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்படும்.

ஆனால், இன்று அப்படி மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. இதனால், ஆவேசமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவர்னர் உரையின் குறுக்கே குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் எதிர்க்கட்சியினர் உடன் இணைந்து கவர்னர் உரைக்கு இடையூறு செய்தனர்.

இதனை அடுத்து, மந்திரி ஒருவர் உடனே சென்று மராத்தி மொழியில் கவர்னர் உரையை மொழி மாற்றம் செய்து பேசினார். ஆனாலும், இதனை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சியினர் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். #TamilNews

Similar News