செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர்: பாராளுமன்ற இரு அவைகளும் பிப்ரவரி 1-ம் தேதி வரை ஒத்திவைப்பு

Published On 2018-01-29 14:17 IST   |   Update On 2018-01-29 14:17:00 IST
பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், பாராளுமன்ற இரு அவைகளும் பிப்ரவரி 1-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. #BudgetSession
புதுடெல்லி:

முத்தலாக் சட்ட மசோதா விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். 

ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து கடந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதிமந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அதில், நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சியானது 7 முதல் 7.5 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலைத் தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளும் பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 1-ம்தேதி 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து 9-ம் தேதி வரை கூட்டத் தொடரின் முதல் அமர்வு நடைபெறும். அதன்பின்னர் இரண்டாவது அமர்வு மார்ச் 5-ம்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம்தேதி வரை நடைபெறும். #BudgetSession #tamilnews

Similar News