செய்திகள்

அபுதாபியில் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா - பிரதமர் மோடி பங்கேற்கிறார்

Published On 2018-01-29 06:38 IST   |   Update On 2018-01-29 06:38:00 IST
அபுதாபியில் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். #AbuDhabi #HinduTemple #Modi
அபுதாபி:

அபுதாபியில் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

அமீரகத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக முதல் முறையாக சென்றார். அப்போது மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த கோவிலை கட்டுவதற்காக அமீரக அரசு சார்பில் 25 ஆயிரம் சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த சுவாமிநாராயண் அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து கோவிலின் கட்டுமான பணிகளை முறைப்படி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் துபாயில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி தொடங்க உள்ள உலக அரசு உச்சிமாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்காக நரேந்திர மோடி அடுத்த மாதம் 10-ந் தேதி அமீரகத்திற்கு செல்கிறார்.

விமான நிலைய வரவேற்புக்கு பிறகு அவர் உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். பின்னர் அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று கோவிலின் கட்டுமான பணிகளை மோடி தொடங்கிவைக்கிறார்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக முக்கிய அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமீரக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #AbuDhabi #HinduTemple #Modi #tamilnews

Similar News