செய்திகள்

பசுக்களை கடத்தினால் கொல்லப்படுவீர்கள்: ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. எச்சரிக்கை

Published On 2017-12-25 19:28 IST   |   Update On 2017-12-25 19:28:00 IST
பசு மாடுகளை கடத்துபவர்களும், வெட்டுபவர்களும் கொல்லப்படுவார்கள் என ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு வாகனத்தில் பசு மாடுகளை கடத்திவந்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றனர். துப்பாக்கியால் சுட்டபடி அந்த வாகனத்தில் வந்தவர்கள் தப்பியோட முயன்ற நிலையில் அப்பகுதி பொதுமக்களில் சிலர் அவர்களை பிடித்து சரமாரியாக தாக்கி காயப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ராம்கர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கியான் தேவ் அஹுஜா, பசு கடத்தல்காரர்களுக்கு பொதுமக்கள் தாக்கியதில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. அவர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தான் காயம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீசாரின் சோதமையும் மீறி சமீப நாட்களாக சுமார் 100 பசு கடத்தல் சம்பவங்கள் இப்பகுதியில் நடைபெற்றுள்ளதாக தெரிவித்த அவர், போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு பசு கடத்தல்காரர்கள் தப்பிச் செல்ல முயல்வதால் அவர்கள் மீது பொதுமக்கள் ஆத்திரத்தில் உள்ளதாகவும் கூறினார்.

மேலும், பசு மாடுகளை கடத்தினாலும், வெட்டினாலும் நீங்கள் கொல்லப்படுவீர்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பரபரப்பு கருத்துகளை அவ்வப்போது தெரிவிக்கும் கியான் தேவ் அஹுஜா, பிரசித்தி பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் விபச்சாரம் மற்றும் போதைப்பொருள் கூடாரமாக மாறி விட்டது, அங்கு நாள்தோறும் 2 ஆயிரம் காலி மது பாட்டில்களும், சுமார் 3 ஆயிரம் பயன்படுத்தப்படுத்த ஆணுறைகளும் சிதறி கிடக்கின்றன என்று முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிக்கும் இவர் பசு மாடுகளை கடத்துபவர்களும், வெட்டுபவர்களும் கொல்லப்படுவார்கள் என தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News