செய்திகள்

நவராத்திரி விழா: வைஷ்ணவ தேவி கோவிலில் 6 நாட்களில் 1.86 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Published On 2017-09-28 08:07 GMT   |   Update On 2017-09-28 08:07 GMT
நவராத்திரி பண்டிகையையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயத்தில் கடந்த ஆறு நாட்களில் 1.86 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரின் அருகாமையில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாகும். ஜம்முவில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தூரத்தில், ரேசாய் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு கத்ரா மலையடிவார முகாமில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு செங்குத்தான மலையின் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்,

ஒன்பதுநாள் திருவிழாவாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையையொட்டி இந்த ஆலயத்துக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதையடுத்து இந்த ஆண்டு நவராத்திரி கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. முதல் 6 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நவராத்திரியின் முதல் நாளான கடந்த வியாழக்கிழமை 21,126 பக்தர்களும், வெள்ளிக்கிழமை 27,589 பக்தர்களும், சனிக்கிழமை 40,078 பக்தர்களும், ஞாயிற்றுக்கிழமை 34,068 பக்தர்களும், திங்கட்கிழமை 34,066 பக்தர்களும் மற்றும் செவ்வாய்க்கிழமை 29,352 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வைஷ்ணவ தேவியை தரிசனம் செய்துள்ளனர்.

Tags:    

Similar News