செய்திகள்

ராஜஸ்தானில் ஆபரேசன் தியேட்டருக்குள் டாக்டர்கள் சண்டை: மூச்சு திணறி குழந்தை பலி

Published On 2017-08-30 07:00 GMT   |   Update On 2017-08-30 07:00 GMT
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கர்ப்பிணிப்பெண்ணுக்கான அறுவை சிகிச்சையில் இரு டாக்டர்களுக்கான தகராறில் குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோத்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று பிரசவத்துக்காக கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அறுசுவை சிகிச்சை மூலம் பிரசவத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அறுவை சிகிச்சையை தொடர்வது குறித்து திடீரென இரு டாக்டர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

அந்த தகராறு வாக்குவாதமாக மாறியது. அவர்கள் இருவரையும் சக டாக்டர்களும், நர்சுகளும் சமசரம் செய்தனர். ஆனால் இரு டாக்டர்களும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அறுவை சிகிச்சை செய்து பிறந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இரு டாக்டர்களும் அதை கவனிக்காமல் சண்டையில் ஈடுபட்டனர்.


இதன் காரணமாக பிறந்த அடுத்த ஓரிரு நிமிடங்களில் மூச்சு திணறி குழந்தை உயிரிழந்தது. ஆனால் இதை மறைத்த மற்ற டாக்டர்கள் குழந்தை இறந்து பிறந்ததாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆபரேசன் தியேட்டருக்குள் இரு டாக்டர்களும் சண்டை போட்டதையும், அதனால் மூச்சு திணறி குழந்தை இறந்ததையும் ஊழியர் ஒருவர் செல்போனில் படம் பிடித்திருந்தார். அந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து ராஜஸ்தான் மாநில அரசு விசாரணை நடத்தியது. ஆபரேசன் தியேட்டருக்குள் சண்டையிட்ட இரண்டு டாக்டர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

குழந்தை பலியானதற்கு டாக்டர்கள்தான் காரணம் என்று தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News