செய்திகள்
காதல் மனைவி மம்தாவுடன்அமித்.

ஜெய்ப்பூரில் காதல் திருமணம் செய்த தொழில் அதிபர் குண்டு வீசி கொலை

Published On 2017-05-18 12:35 IST   |   Update On 2017-05-18 12:35:00 IST
ஜெய்ப்பூரில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தொழில் அதிபர் குண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் சோமன் பிள்ளை. இவரது மனைவி ரமாதேவி. பல ஆண்டுகளுக்கு முன்பு சோமன் பிள்ளை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு சென்று தொழில் தொடங்கினார். அவரது மகன் அமித் (வயது 28) , மகள் சுமிதா (25).

இந்த நிலையில் சோமன் பிள்ளை மரணமடைந்ததை தொடர்ந்து தந்தையின் தொழிலை அமித் கவனித்து வந்தார். மேலும் தனது தங்கைக்கு கேரளாவில் மாப்பிள்ளை பார்த்து திருமணமும் செய்து வைத்தார்.

இதற்கிடையில் அமித்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மம்தா(24) என்ற ராஜஸ்தான் மாநில பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த காதலை ஏற்கவில்லை. இதனால் அமித் தனது காதலியை கேரளா அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு அமித் தனது காதல் மனைவியுடன் மீண்டும் ராஜஸ்தான் சென்று வசிக்கத் தொடங்கினார். அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதை தொடர்ந்து பெண்ணின் வீட்டார் அங்கு சென்றனர். அவர்கள் நடந்ததை மறந்து விட்டு தங்கள் மகளிடம் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தனர்.

அமித்துக்கு செல்போனில் அழைப்பு வந்ததை தொடர்ந்து அவர் வீட்டுக்கு வெளியே சென்று போனில் பேசிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வீட்டுக்கு வெளியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு வெளியில் சென்று பார்த்தனர். அங்கு அமித் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அவரது மனைவியின் சகோதரர் தான் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வீசி அமித்தை கொன்று விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் இந்த கொடூரக்கொலை நடந்துள்ளது.

கணவர் இறந்ததை பார்த்த அதிர்ச்சியில் அவரது கர்ப்பிணி மனைவி மயங்கி விழுந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளியை தேடிவருகிறார்கள்.

Similar News