செய்திகள்

காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

Published On 2017-05-08 00:30 IST   |   Update On 2017-05-08 00:30:00 IST
காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிக்கு, சக கூட்டாளிகள் துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி சுட்டி இறுதி மரியாதை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள மிர் பஜார் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் ரோந்து வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில், ஒரு போலீஸ்காரர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த பைசல் அகமது என தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று பைசல் அகமதுவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

அப்போது பயங்கரவாதிகள் 4 பேர் மக்கள் கூட்டத்தோடு கலந்தனர். பின்னர் அவர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி சுட்டு தங்களது கூட்டாளிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இறுதிச் சடங்கு நடந்த இடத்திற்கு பயங்கரவாதிகள் சகஜமாக வந்து கூட்டாளிக்கு அஞ்சலி செலுத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பைசல் அகமதுவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியையொட்டி குல்காம் மாவட்டம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

Similar News