செய்திகள்

தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சாட்டையால் அடிக்கும் போராட்டம்

Published On 2017-04-18 13:41 IST   |   Update On 2017-04-18 13:41:00 IST
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி போன்று வேடமணிந்த ஒருவர், விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்று சித்தரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:

வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம் இன்று 36- வது நாளாக நீடிக்கிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த நாட்களில் எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மண்சோறு சாப்பிடுதல், மீசை, தாடியை மழித்தல், மொட்டை போடுதல், சேலை அணிதல், தாலி அறுத்தல், முழு நிர்வாணம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேசவில்லை.

இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி போன்று வேடமணிந்த ஒருவர், விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்று சித்தரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அய்யாக்கண்ணு கூறுகையில், நாங்கள் 24 மணி நேரமும் சாலையிலேயே இருந்து போராடி வருகிறோம். எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. பல்வேறு நூதன போராட்டங்களையும் நடத்தி விட்டோம்.

இன்று பிரதமர் மோடி எங்களை சாட்டையால் அடிப்பது போன்று போராட்டம் நடத்துகிறோம். இனி மேலும் எங்களை கண்டு கொள்ளாவிட்டால் தூக்கில் தொங்க வேண்டியது தான், வேறு வழியே இல்லை என்றார்.

இந்த சாட்டையால் அடிக்கும் போராட்டத்தின் போது விவசாயி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மற்ற விவசாயிகள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி மயக்கத்தை தெளிய வைத்தனர். கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Similar News