செய்திகள்

கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்: அவசர சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டார்

Published On 2017-04-11 05:43 GMT   |   Update On 2017-04-11 05:43 GMT
கேரள பள்ளிகளில் மலையாளம் மொழி கற்பிப்பதை கட்டாயமாக்கும் வகையில் அம்மாநில அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தில் ஆளுநர் சதாசிவம் கையெழுத்திட்டார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இயங்கக்கூடிய சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் 
பள்ளிகளிலும் மலையாள மொழியை கட்டாயப் பாடமாக்கும் வகையில் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது.



முன்னதாக, கேரள மாநிலத்தின் பள்ளி மற்றூம் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்குத் தாய்மொழியான மலையாளத்தில் சரிவர எழுத தெரியவில்லை என்று அங்குள்ள கல்வியாளர்கள் மாநில அரசிடம் புகார் தெரிவித்து இருந்தனர். அரசின் கவனத்துக்கு இந்தகைய புகார்கள் வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மாநில அரசு அனைத்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அனைத்து 
பள்ளி, கல்லூரிகளிலும் கட்டாயம் மலையாளம் கற்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 



இந்நிலையில், கேரள பள்ளிகளில் மலையாளம் மொழி கற்பிப்பதை கட்டாயமாக்கும் வகையில் அம்மாநில அரசு கொண்டு வந்த அவசர 
சட்டத்தில் ஆளுநர் சதாசிவம் இன்று கையெழுத்திட்டார். இந்த அவசர சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar News