செய்திகள்

5 மாநில சட்டசபை தேர்தல்: மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கண்டிப்பு

Published On 2017-01-29 04:19 GMT   |   Update On 2017-01-29 04:19 GMT
மத்திய அரசு 5 மாநில சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு முடிவு எடுக்கிறபோதும், அது குறித்து தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து சம்மதம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 8-ந் தேதி வரையில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட கடந்த 4-ந் தேதி முதல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் நடந்து முடியும் வரை இவை அமலில் இருக்கும்.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கலுக்கான தேதியை நிதி அமைச்சகம் நிர்ணயித்தது, தேர்தல் நடைபெறுகிற 5 மாநிலங்களில் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்த நிதி ஆயோக் முடிவு எடுத்தது போன்றவற்றில் தனது சம்மதத்தை முன்கூட்டியே பெறவில்லை என்பது தேர்தல் கமிஷனுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இதை கண்டித்து, மத்திய மந்திரிசபை செயலாளருக்கு தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர், “தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு முடிவு எடுக்கிறபோதும், அது குறித்து தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து சம்மதம் பெற வேண்டும். இது தொடர்பாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே வகுத்துள்ள விதிமுறைகளை அனைத்து அமைச்சகங்களும் பின்பற்றுவதற்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Similar News