செய்திகள்

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் சிஇஒ ராஜினாமா

Published On 2016-12-15 12:13 GMT   |   Update On 2016-12-15 12:38 GMT
உலகின் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் சிஇஒ தனது பதவியினை ராஜினாமா செய்தார்.
லக்னோ:

இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தர்னா கோயல் தனது பதவியினை ராஜினாமா செய்தார். 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக அறிவித்த ரிங்கிங் பெல்ஸ் குறைந்த அளவு போன்களை மட்டுமே விநியோகம் செய்தது. 

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் இணையத்தளம் முடங்கியிருப்பது, தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல் உள்ளிட்டவை அந்நிறுவனம் செயல்படுவது குறித்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இந்நிலையில் ரிங்கிங் பெல்ஸ் அதிகாரிகள் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியிருக்கின்றனர். 

MDM எலக்ட்ரானிக்ஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் புதிய நிறுவனம் மின்சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறது. ரிங்கிங் பெல்ஸ் நிறுவன தலைவர் மோஹித் கோயல் தான் புதிய நிறுவனத்திற்கும் நிர்வாக தலைவராக பதவியேற்று இருக்கிறார். மற்ற இயக்குனர்களும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

புதிய MDM நிறுவனமும் ரிங்கிங் பெல்ஸ் போன்றே மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து அந்நிறுவனம் ஃப்ரீடம் 9900 என்ற எல்இடி டிவிக்களை வெளியிட்டது. இதன் விலை ரூ.9900 என நிர்ணயம் செய்யப்பட்டது. 

ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போன்கள் முதலில் 5000 அதன்பின்னர் 65000 என மொத்தம் 70000 போன்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. ஃப்ரீடம் 9900 எல்இடி டிவிக்களை விநியோகம் செய்யப்படவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோடு ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News