செய்திகள்

வங்கிகளில் நாளை முதல் 500,1000 நோட்டுகளை மாற்ற முடியாது: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2016-11-24 15:06 GMT   |   Update On 2016-11-24 15:07 GMT
வங்கிகளில் நாளை முதல் 500,1000 நோட்டுகளை மாற்ற முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ம் இரவு அறிவித்தார். மேலும் பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் மோடி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கு சென்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகின்றனர். மறுபுறம் புதிய நோட்டுகளுக்கு ஏற்ப ஏ.டி.எம்.களை சீரமைக்கும் பணியும் துரித கதியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் வங்கிகளில் நாளை முதல் 500,1000 நோட்டுகளை மாற்ற முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டு மூலம் சேவைகளை பெற டிசம்பர் 15 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ள மத்திய அரசு இதுகுறித்து அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களை பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தி பெறலாம்.

குடிநீர், மின்கட்டணம் செலுத்த பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம்.

வெளிநாட்டினர் தங்களது நாட்டு பணத்தை வாரத்துக்கு ரூ.5000 என்ற அளவில் தங்களது பாஸ்போர்ட்டுகளை காண்பித்து வாங்கிக் கொள்ளலாம்.

நாளை முதல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிக்கணக்கில் செலுத்த மட்டுமே முடியும். வங்கிகளில் சில்லறை பெற முடியாது.

மத்திய, மாநில, மாநகராட்சி பள்ளிகளில் பழைய 500 ரூபாய் தாள்களை பயன்படுத்தி கல்வி கட்டணம் செலுத்தலாம்.

கூட்டுறவு அங்காடிகளில் ஒரே நேரத்தில் 5000 ரூபாய் வரை பொருட்கள் வாங்கலாம்.

பழைய 500 ரூபாய் பயன்படுத்தி மொபைல்களில் பிரீபெய்டு டாப்-அப் செய்து கொள்ளலாம்.  

டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 ரூபாய் நோட்டை பயன்படுத்தி டிசம்பர் 3-ம் தேதி முதல் டிசம்பர் 15 வரை சுங்கக்கட்டணம் செலுத்தலாம்.

Similar News