செய்திகள்

ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

Published On 2016-10-30 22:42 IST   |   Update On 2016-10-30 22:42:00 IST
பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன் இன்று தொலைபேசியில் பேசினார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் இந்தியர், மன்மீத் அலிசீர் (வயது 29). இவர் அங்கு கடந்த 28–ந் தேதி ஓடும் பஸ்சில் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார். நல்ல பாடகராக பஞ்சாப் மக்களிடம் அறியப்பட்டிருந்த மன்மீத் அலிசீரின் படுகொலை, அந்த இன மக்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன் இன்று தொலைபேசியில் பேசினார்.

அவருக்கு தீபாவளி வாழ்த்துகள் கூறிய மோடி, மன்மீத் அலிசீர் கொல்லப்பட்டது குறித்த பிரச்சினையை எழுப்பினார். அவரது படுகொலையால் இந்தியாவில் கவலை எழுந்திருப்பது குறித்து எடுத்துரைத்தார். இதில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கு மால்கம் டர்ன்புல் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்ததுடன், இது தொடர்பாக விசாரணை நடந்துவருவதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 48 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Similar News