செய்திகள்

எல்லையை மறந்து கிங்பிஷர் பறவையை போல் விஜய் மல்லையா பறந்துவிட்டார்: மும்பை ஐகோர்ட்டு கருத்து

Published On 2016-09-20 02:31 GMT   |   Update On 2016-09-20 02:31 GMT
“எல்லையை மறந்து கிங்பிஷர் பறவையை போல் விஜய் மல்லையா பறந்துவிட்டார்” என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மும்பை:

“எல்லையை மறந்து கிங்பிஷர் பறவையை போல் விஜய் மல்லையா பறந்துவிட்டார்” என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரையில் கடன் வாங்கிவிட்டு தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் குடியேறிவிட்டார். மேலும், தன்னுடைய ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனம் மூலம் சேவை வரித்துறையிடம் ரூ.532 கோடி அவர் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்.

இதனை மீட்க கோரி சேவை வரித்துறை சார்பில் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி மற்றும் பி.பி.கொலப்வாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-

விஜய் மல்லையா தன்னுடைய நிறுவனங்களுக்கு ‘கிங்பிஷர்’ என்று பெயர் வைத்தது ஏன் என்பது யாருக்காவது தெரியுமா? யாரும் தன்னுடைய உடமைகளுக்கு பொருத்தமான பெயர் வைத்ததாக வரலாறு கிடையாது. ஆனால், விஜய் மல்லையா வைத்திருக்கிறார்.

ஏனென்றால், ‘கிங்பிஷர்’ என்ற பறவை எல்லைகளை மறந்து, பறக்கும் தன்மை கொண்டது. எந்தவொரு நாட்டின் எல்லையாலும் அதனை தடுக்க முடியாது. இப்படி தான் விஜய் மல்லையாவும் இருக்கிறார். கிங்பிஷர் பறவையை போல் அவர் பறந்துவிட்டார்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Similar News