செய்திகள்

ரூ.15 ஆயிரம் கட்டணத்தில் திருப்பதிக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா பயணம்

Published On 2016-09-01 10:46 IST   |   Update On 2016-09-01 10:46:00 IST
திருப்பதி கோவிலுக்கு ‘ஹெலிகாப்டர்’ சுற்றுலா கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.15 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:

திருப்பதி கோவிலுக்கு ரெயில், பஸ் மூலம் பக்தர்களை அழைத்து சென்று ஏழுமலையானை தரிசிக்க ஆந்திர மாநில சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இப்போது ஹெலிகாப்டரில் பக்தர்களை திருப்பதி கோவிலுக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. இதை அறநிலையத்துறையுடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இதற்காக புதுடெல்லியை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்து இருக்கிறது.

விஜயவாடாவில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ஹெலிகாப்டர் ஸ்ரீசைலம் செல்லும். அங்கிருந்து கார் மூலம் கோவிலுக்கு அழைத்து சென்று வி.ஐ.பி. தரிசனம் வழங்கப்படும்.

பின்னர் இழுவை ரெயிலில் அழைத்து சென்று பாதா கங்கையில் படகு சவாரி செய்ய வைக்கின்றனர். பின்னர் மதியம் 12.30 மணிக்கு ஸ்ரீசைலத்தில் ஹெலிகாப்டர் புறப்பட்டு 1.30 மணிக்கு திருப்பதி சென்று அடைகிறது.

அங்கு கார் மூலம் திருச்சானூர், சீனிவாச மங்களபுரம், ஸ்ரீகாளகஸ்தி கோவில்களில் தரிசனம் செய்ய அழைத்து செல்லப்பட்டதும் பக்தர்கள் பின்னர் திருமலைக்கு அழைத்து சென்று இரவு தங்க வைக்கப்படுகிறார்கள்.

மறுநாள் காலை வி.ஜி.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய அழைத்து செல்லப்படுகிறார்கள்.

பின்னர் காலை 7.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 8.30 மணிக்கு விஜயவாடா சென்று அடைகிறது. இந்த சுற்றுலா திட்டத்தில் விஜயவாடா-ஸ்ரீசைலம்-திருமலை, ஐதராபாத்-ஸ்ரீசைலம்-திருமலை என்று 2 சுற்றுலா திட்டங்கள் உள்ளன.

ஒரு ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்யலாம். ஒரு நபருக்கு ரூ.15 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வெள்ளோட்டம் 2 நாளில் நடைபெற இருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

Similar News