செய்திகள்

காஷ்மீர்: இன்று அதிகாலை என்கவுன்டர் நடந்த இடத்தில் குண்டு வெடித்து வாலிபர் படுகாயம்

Published On 2016-05-07 11:00 IST   |   Update On 2016-05-07 11:00:00 IST
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்திய இடத்தில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த கையெறி குண்டு வெடித்து வகீல் அஹமது வாகே என்ற வாலிபர் படுகாயமடைந்தார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்திய இடத்தில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த கையெறி குண்டு வெடித்து வகீல் அஹமது வாகே என்ற வாலிபர் படுகாயமடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநில தென்பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பெரும்நாசத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இங்குள்ள பன்ஸ்காம் கிராமத்தை தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டுக்குழுவினர் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். அவர்கள்மீது துப்பாகிகளால் சுட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர் தாக்குதல் நடத்தினர்.

விடிய, விடிய நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இன்று அதிகாலை மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்ட அஷ்பாக் அஹமத் தார், இஷ்பாக் அஹமத் பாபா, ஹசீப் அஹமத் ஆகிய இவர்கள் மூவரும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் பிணங்களை பார்ப்பதற்காக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆவலுடன் ஓடிவந்தனர். அவர்களை அங்கு நெருங்கவிடாதபடி பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும், என்கவுன்டர் நடந்த இடத்துக்குள் அத்துமீறி சிலர் நுழைய முயன்றனர். அப்போது தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த கையெறி குண்டு வெடித்து வகீல் அஹமது வாகே என்ற வாலிபர் படுகாயமடைந்தார். அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அப்பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.

Similar News