செய்திகள்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து 8 பேர் விடுவிப்பு

Published On 2016-04-25 20:34 IST   |   Update On 2016-04-25 20:34:00 IST
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 8 பேரை மும்பை நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
மும்பை:

2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திய தீவிரவாத தடுப்பு படை 9 பேரை கைது செய்தது. அவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினரின் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ.யும் தீவிரவாத தடுப்பு பிரிவு நடத்திய விசாரணையை ஏற்றுக்கொண்டது. இதன்பிறகு, கடந்த 2011ல் இந்த வழக்கை விசாரித்த தேசிய புலானாய்வு பிரிவு, இந்து அமைப்பான அபினவ் பாரத் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. அதேசமயம், தீவிரவாத தடுப்பு படையால் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் எனக்கோரி 9 பேரும் மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், மற்ற 8 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மாலேகான் குண்டுவெடிப்பில் 8 பேர் மீதான குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

Similar News