இந்தியா

கொடுங்கலூரில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உறைகிணறு கண்டுபிடிப்பு

Published On 2023-06-14 06:49 GMT   |   Update On 2023-06-14 06:49 GMT
  • கிணறு பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியது போன்று காணப்பட்டது.
  • மதுரையை எரித்த கண்ணகி, அங்கிருந்து கொடுங்கலூர் வந்ததாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொடுங்கலூர், பூவத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் வீட்டின் அருகே குப்பைகளை புதைக்க குழி தோண்டினார். அப்போது தரையில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் தோண்டியபோது, வட்டவடிவில் பழமையான கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கிணறு பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியது போன்று காணப்பட்டது. இதனை கண்டு ஆச்சரியம் அடைந்த பார்த்தசாரதி, இதுபற்றி பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றை ஆய்வு செய்தனர். இதில் கிணற்றின் மேல்பகுதியில் காணப்பட்ட மண்ணை ஆய்வு செய்தபோது அது சுடுமணலால் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன்மூலம் இந்த கிணறு சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருக்கலாம் என தெரிகிறது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். மேலும் இங்கு கண்டு பிடிக்கப்பட்ட பழமையான கிணறு, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களுடன் தொடர்பு இருப்பதுபோல உள்ளது. எனவே இதுதொடர்பாக கீழடியில் கிடைத்த பொருள்களுடன் இணைத்து ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தொல்லியல் துறை இயக்குனர் ராகவ வாரியார் கூறும்போது, பார்த்தசாரதியின் வீட்டில் பழமையான கிணறு கண்டு பிடிக்கப்பட்ட பகுதிக்கும் தமிழர் கலாச்சாரத்திற்கும் தொடர்பு இருக்கும் என்று நம்புகிறோம். இந்த பகுதியில் மக்கள் வசித்திருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கலாம். இங்குள்ள கோவில்கள், நீராதாரங்கள் ஆகியவை இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்யப்படும், என்றார்.

மதுரையை எரித்த கண்ணகி, அங்கிருந்து கொடுங்கலூர் வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த பகுதிக்கும், மதுரை பகுதிக்கும் தொடர்பு இருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகிறார்கள்.

Tags:    

Similar News