இந்தியா

ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பலி

Published On 2024-04-12 08:38 GMT   |   Update On 2024-04-12 08:38 GMT
  • 3 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
  • சிறுவன் பாதுஷா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கரிம்புழா ஆறு உள்ளது. இந்த ஆற்றில் கூட்டி லக்கடவு என்ற பகுதியில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது செர்புளச்சேரி குட்டிக்கோடு பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவரின் மகள் ரிஸ்வானா(வயது19), கரக்குறிச்சியை சேர்ந்த அபுபக்கர் என்பவரின் மகள் டிமா மெப்பா(20) என்ற 2 இளம்பெண்கள் மற்றும் பாதுஷா என்ற சிறுவன் ஆகிய 3 பேரும் ஆற்றில் மூழ்கினர்.

இதனை அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் 3 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதனையறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரையும் மீட்டு வட்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் ரிஸ்வானா மற்றும் டிமா மெப்பா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். சிறுவன் பாதுஷா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். ஆற்றில் குளித்த 2 இளம்பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News