மகாராஷ்டிராவில் ரெயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு - 4 பேர் கவலைக்கிடம்
- மகாராஷ்டிரா மாநிலம் சந்தர்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது.
- இந்த விபத்தில் 15 பேர் வரை காயமடைந்தனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் சந்தர்பூர் அருகே உள்ள பல்லார்ஷா சந்திப்பு ரெயில் நிலையத்தில் 60 அடி உயரம் உடைய நடைமேம்பாலம் ஒன்று உள்ளது.
பல்லார்ஷா ரெயில் நிலையம் தெலுங்கானா மாநிலத்திற்குச் செல்லும் பாதையில் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள கடைசி சந்திப்பாகும். இந்த நடைமேம்பாலத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் ஒன்றாவது மற்றும் இரண்டாவது ரெயில் பாதையை கடப்பதற்காக பயன்பாட்டில் இருந்த நடைமேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
இந்தச் சம்பவத்தில் சுமார் 13 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.