கதம்பம்

டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

நான் இசைக்கு சக்கரவர்த்தி

Published On 2023-05-20 07:27 GMT   |   Update On 2023-05-20 07:27 GMT
  • 1947 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது.
  • நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தையே நேரு வாசித்தார்.

1947 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. இதை நாட்டு மக்களுக்குப் பிரகடனப்படுத்த பிரமாண்டமான சுதந்திர விழா டெல்லியில் நடந்தது. அந்த விழா மேடையில் சுமார் 10 நிமிடம் மட்டுமே தனது நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டினார் டி.என். ராஜரத்தினம் பிள்ளை.

இதைக்கேட்டு இந்திய முதல் பிரதமர் நேரு அசந்து போனார். இவரது நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தையே நேரு வாசித்தார். அப்போது அவரிடம் நேரு "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

"ஊரில் திருடர் பயம் அதிகமாக இருக்கிறது. எனவே கரன்ட் வேண்டும்" என்று கேட்டார் ராஜரத்தினம் பிள்ளை. இதைச் சொல்லிவிட்டு டெல்லியிலிருந்து புறப்பட்டு ஊர் திரும்பிய ராஜரத்தினம் பிள்ளையை ஊரில் இருந்த மின்சார விளக்குகள், கண்சிமிட்டி வரவேற்றன!

ஒரு கச்சேரிக்கு, தான் வரும்போது எழுந்து நிற்காத மாவட்ட கலெக்டரிடம் ராஜரத்தினம் கேட்டாராம்.. ''ஏம்ப்பா... நான் இந்தக் கச்சேரிக்கு மட்டும் மூவாயிரம் ரூபாய் வாங்கியிருக்கேன். உன் மாசச் சம்பளமே ஆயிரத்தைத் தாண்டாது. நீ பெரியவனா, நான் பெரியவனா?''

ஒருசமயம் கலெக்டர் என்ன, மைசூர் மகாராஜாவையே ஒரு பிடி பிடித்துவிட்டார். கச்சேரி முடிந்ததும் கைதட்டி பாராட்டிய மகாராஜா, ''கணக்குப்பிள்ளை, பணத்தை எடுத்துவந்து பிள்ளைக்குக் கொடு'' என்றாராம்.

உடனே பிள்ளை, பக்கவாத்தியம் வாசித்தவரைக் கூப்பிட்டு, ''மேளக்காரரே... பணத்தை வாங்கும்...'' என்று சொல்லிவிட்டு, மகாராஜாவிடம், ''நீங்கள் மாநிலத்துக்கு ராஜா என்றால் நான் இசைக்குச் சக்கரவர்த்தி ஐயா'' என்று சொல்லியிருக்கிறார். அப்புறம் மகாராஜா தன் கையாலேயே பிள்ளைக்குச் சன்மானம் செய்தாராம்!

- அம்ரா பாண்டியன்

Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்