கதம்பம்

கோப்புபடம். 

பணத்தை ஈர்க்கும் ரகசியம்

Published On 2023-05-26 06:48 GMT   |   Update On 2023-05-26 06:48 GMT
  • பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள்.
  • பணம் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம்.

வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச்சுவர் ஜன்னலுடன் இருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜன்னல்கள் திறந்திருப்பது நல்லது.

வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென்மேற்கு திசை முக்கியம்.

இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். வடமேற்கு மூலையில் பணத்தை வைக்கக் கூடாது.

பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் தேக்கு மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் 'தேக்கு மரம்' என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும்.

பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.

பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அது நம் வீட்டுக்குள் வந்து பறந்துபோகும் சிட்டுக்குருவியைப் போன்றது. அதைச் சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள். நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். அப்போதுதான் பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்.

உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும்.

பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும் குறை குறையோடு சேரும் என்பதால், அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டாக வையுங்கள்.

பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். (பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம்) பணத்துக்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்.

-ஸ்ரீராம் கோவிந்த்

Tags:    

Similar News

இலவசம்