கதம்பம்

உறவும் நட்பும்...

Published On 2022-10-05 10:29 GMT   |   Update On 2022-10-05 10:29 GMT
  • ஏராள காரணங்கள் என்னைப் பேசவிடாமல் வைத்திருக்க...
  • நேற்றிரவு நண்பன் அழைத்தான் அலைபேசியில்..

பெண்ணுக்கு செய்த

முறைமாமன் சீரில்

மூன்று கிராம்

குறைந்ததற்கு

மூக்கு சிந்தி அழுது போன

மூத்தவள்

இன்று வரை -

பேசவில்லை

சீமந்தக்காப்பு

சின்னதாய் இருந்தது கண்டு

கோபித்துக்கொண்ட

சின்னவள்

இன்றுவரை -

பேசவில்லை

சின்னமச்சானுக்கு கொடுத்த

சீர்வரிசைத்தட்டில்

இருந்த

பட்டுவேட்டியின்

விலை பார்த்து

விரக்தி சிரிப்போடு போன

பெரிய மச்சான்

இன்றுவரை -

பேசவில்லை

பிறந்த அன்றே

தன் குழந்தையை

பார்க்க வரவில்லை என்று

கோபித்துக்கொண்ட

பெரிய தம்பியும்

இரண்டு முறை

அழைத்தும்

அலைபேசியை

எடுக்காத காரணஞ்சொல்லி

சின்னதம்பியும்

இன்றுவரை -

பேசுவதில்லை

மருமகளுடனான

சண்டையில்

நான்

மனைவிபக்கமே இருப்பதாக

ஒரு காரணஞ்சொல்லி

பெற்றவளும்

இன்றுவரை -

பேசுவதில்லை

அழைப்பிதழ் கொடுக்க

நேரில் வராமல்

அலைபேசியில் மட்டுமே

தகவல் சொல்லி

அழைத்த

அவமானம் தாங்காமல்

உறவுக்காரர்கள் பலரிடம்

நானும் -

பேசுவதில்லை....

இப்படியாக...

என்னைச் சுற்றியே

ஏராள காரணங்கள்

என்னைப்

பேசவிடாமல் வைத்திருக்க...

நேற்றிரவு

நண்பன் அழைத்தான்

அலைபேசியில்..

முப்பதாண்டுகளுக்கு முன்

பிரிந்துபோன

நண்பர்கள் எல்லாம்

கூடிப்பேச

ஏற்பாடு செய்திருப்பதாக...

இதோ நான்-

கிளம்பிக்கொண்டிருக்கிறேன்...!

-அழ. இரஜினிகாந்தன்

Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்