இந்தியா

8 வயது சிறுமியின் புகாரால் டெலிவரி பாய்க்கு தர்மஅடி: சிசிடிவி-யால் வெளிவந்த உண்மை

Published On 2023-06-17 03:05 GMT   |   Update On 2023-06-17 03:16 GMT
  • பெற்றோருக்கு பயந்து பொய் கூறியதாக தெரியவந்துள்ளது
  • சிசிடிவி கேமராவால் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார் டெலிவரி பாய்

பெங்களுருவில் உள்ள எலாக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் உள்ள அப்பார்ட்மென்டில் உணவு டெலிவரி பாய், ஆர்டர் செய்தவருக்கு உணவுப் பார்சலை வழங்க சென்றுள்ளார். அப்போது, அந்த டெலிவரி பாய் தன்னை மொட்டைமாடிக்கு அழைத்துக் சென்றார். தான் அவரது கையை கடித்துவிட்டு தப்பித்தேன் என பெற்றோரிடம் கூறியுள்ளார்.

உடனே, அவரது பெற்றோர் அப்பார்ட்மென்ட் காவலாளியிடம் கேட்டை மூடச்சொல்லி, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் டெலிவரி பாயை நைய புடைத்துள்ளனர். காவலாளிகளும் தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர் போலீஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரில் நாங்கள் மொட்டைமாடி சென்றோம். அப்போது எங்களது குழந்தை தனியாக நின்றிருந்தாள். அவளிடம் விசாரித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. போலீசார் சிசிடிவி-யை பரிசோதனை செய்து பார்த்தபோது, அந்த சிறுமி தனியாகத்தான் மொட்டைமாடி சென்றுள்ளார். டெலிவரி பாய் அந்த சிறுமியை அழைத்துச்செல்லவில்லை. இதனால் அந்த சிறுமி வேண்டுமென்றே பொய் சொல்லியுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.

ஏன் பொய் சொன்னாய்? என அந்த சிறுமியிடம் கேட்டபோது, படிக்கும் நேரத்தில் விளையாடியது தெரிந்தால் பெற்றோர்கள் அடிப்பார்கள் என்பதால், அவர்களுக்கு பயந்து பொய் சொன்னதாக தெரிவித்தாள்.

ஒரு சிறுமியின் பொய்யால் டெலிவரி பாய் தர்ம அடி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனது மகள் சொல்வது உண்மை என நம்பி தவறுதலாக புகார் அளித்துவிட்டோம் என சிறுமியின் பெற்றோர் மன்னிப்பு கேட்டனர்.

இதுகுறித்து அந்த டெலிவரி பாய் கூறுகையில் ''சிறுமியின் பெற்றோர்கள், அருகில் உள்ளவர்கள் காவலாளிகளுடன் சேர்ந்து என்னை தாக்கினார்கள். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிசிடிவி என்னை பாதுகாத்துள்ளது. சிசிடிவி கேமரா இல்லையென்றால் என்ன செய்வது? என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கவலை'' என்றார்.

Similar News