செய்திகள்
ஒரு வருடத்திற்கு இலவச இண்டர்நெட் - வைரல் தகவலை நம்ப வேண்டுமா?
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்றதை ஒட்டி வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்க பதக்கம் வென்றது. ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இவரது வெற்றி நாடு முழுக்க கொண்டாடப்பட்டது. அரசு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் என பலத்தரப்பட்டோர் நீரஜ் சோப்ராவின் வெற்றியை கொண்டாடினர்.
இந்த நிலையில், 'டோக்கியோவில் தங்கம் வென்றதை கொண்டாடும் வகையில் மத்திய அரசு ரூ. 2,399 மதிப்பில் ஒரு ஆண்டுக்கு இலவச இண்டர்நெட் சேவையை மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு ரீசார்ஜ் செய்ய கீழே உள்ள முகவரியை க்ளிக் செய்யவும்' எனும் தகவல் வைரலாகி வருகிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில், வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. மேலும் மத்திய அரசு மாணவர்களுக்கு இலவச இண்டர்நெட் வழங்குவதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ தெரிவித்து இருக்கிறது. இலவச இண்டர்நெட் வழங்குவதாக கூறும் தகவலை யாரும் நம்ப வேண்டாம்.
முன்னதாக இதேபோன்ற தகவல் இணையத்தில் வைரலானது. அதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி நிறுவன பயனர்களுக்கு மூன்று மாதம் இலவச இண்டர்நெட் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. பின் இதுவும் பொய் தகவல் என பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ தெரிவித்தது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.