செய்திகள்
காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள்
ஸ்ரீநகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பள்ளி சிறுமிகள் கல்வீசி தாக்குவதும், மறுபுறம் சிறுவர்கள் கையில் தேசிய கொடி ஏந்தி நிற்கும் காட்சிகள் அடங்கிய இரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகளின் ஆட்சி காலத்தில் காஷ்மீர் நிலை இதுதான் என கூறும் தகவலுடன் இரு புகைப்படங்களும் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இரு புகைப்படங்களை இணையத்தில் தேடிய போது, அவை பா.ஜ.க. ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. இதே புகைப்படங்கள் 2017 செய்தி தொகுப்பிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இவற்றை ஐரோப்பிய பிரஸ்போட்டோ ஏஜன்சியை சேர்ந்த செய்தியாளர் படமாக்கினார்.
உண்மையில் இந்த புகைப்படங்கள், காஷ்மீர் மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே ஏப்ரல் 26, 2017 அன்று ஸ்ரீநகர் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்டவை ஆகும். மேலும் ஏப்ரல் 15, 2017 முதல் அப்பகுதியில் பதற்ற சூழல் நிலவியது. பாதுகாப்பு படை மேற்கொண்ட ஆய்வின்போது மாணவர்கள் காயமுற்றதே இதற்கு காரணம் ஆகும்.
அந்த வகையில் வைரல் புகைப்படங்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது எடுக்கப்பட்டவை இல்லை என உறுதியாகி இருக்கிறது. உண்மையில் இந்த புகைப்படங்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டவை ஆகும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.