செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் கருத்து கூறுவது கண்டிக்கத்தக்கது- கேபி முனுசாமி பேட்டி

Published On 2019-06-10 11:02 GMT   |   Update On 2019-06-10 11:02 GMT
எம்.எல்.ஏ.க் களின் கருத்துக்களால் அ.தி.மு.க. தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கேபி முனுசாமி கூறியுள்ளார்.

தர்மபுரி:

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம் பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு கூறுகளாக இருந்த அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்து பொதுக்குழுவை கூட்டி இரட்டை தலைமை என்று முடிவு செய்யப்பட்டு இன்று ஆட்சியும், கட்சியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம். அவரது கருத்தை வரவேற்று குன்னம் ராமசந்திரன் எம்.எல்.ஏ. ஊடகங்களிடம் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். எம்.எல்.ஏ.க் களின் கருத்துக்களால் அ.தி.மு.க. தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் இருவரும் வெளியில் கருத்துக்களை கூறியது கண்டிக்கத் தக்கது.

பாராளு மன்ற தேர்தலில் தோற்று, அ.தி.மு.க. வுக்கு தற்போது பல்வேறு சோதனைகள் வந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.

சட்டமன்ற உறுப்பினர்களின் இதுபோன்ற கருத்துக்களால் எதிரிகளுக்கு, துரோகிகளுக்கு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி தருவதாக அமைந்துவிடும்.

இவர்களுடைய கருத்துக்களால் துரோகிகள் இன்று சசிகலா தான் அ.தி.மு.க.வுக்கு தலைவராக வரவேண்டும் என்று பேசி வருகிறார்கள். எனவே இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

பா.ஜனதா கூட்டணி மந்திரி சபையில் அ.தி.மு.க. சேருவது குறித்து அ.தி.மு.க. தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News