வேலூரில் வருமான வரி சோதனை இன்றும் தொடர்கிறது - தேர்தல் அதிகாரி
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலூரில் கட்டுக் கட்டாக பணம் பிடிபட்டது. இன்றும் சோதனை தொடர்ந்து நடக்கிறது. சோதனையின் முடிவில்தான் எவ்வளவு பணம் என்பது தெரியவரும். வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கு இன்னும் அறிக்கை தரவில்லை.
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தேர்தல் கமிஷனுக்கு செலவின பார்வையாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள், பொது பார்வையாளர்கள் தனித் தனியாக அறிக்கை அனுப்புவார்கள். இதுபோல் நாங்களும் அறிக்கை அனுப்புவோம். இதை வைத்து தலைமை தேர்தல் கமிஷன் ஒரு முடிவுக்கு வரும்.
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.80.35 கோடி பிடிபட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.2.23 கோடி பிடிபட்டிருக்கிறது.
வேலூரில் பிடிபட்டது பற்றி முழு விவரம் வராததால் அந்த தொகை சேர்க்கப்படவில்லை.
மத்திய தேர்தல் கமி ஷனர்கள் சுனில் அரோரா, அசோக், சுசில்சந்திரா ஆகியோர் இன்று இரவு சென்னை வருகிறார்கள். கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் நாளை காலை 10 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை தனித் தனியாக சந்தித்து பேசுகிறார்கள்.
ஒவ்வொரு கட்சி பிரதிநிதிக்கும் 9 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பகல் 11.30 மணி முதல் இரவு 7 மணி வரை மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், கம்யூனிஸ்டுகளுடன் ஆலோசனை நடக்கிறது.
4-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கிறது. பகல் 11.30 மணியளவில் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
மதியம் 1 மணிக்கு பத்திரிகையாளர்களை தேர்தல் கமிஷனர்கள் சந்திக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #Incometax