உள்ளூர் செய்திகள்

தேனீக்கள் கொட்டியதில் வாலிபர் பலி- கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

Published On 2023-09-05 07:17 GMT   |   Update On 2023-09-05 07:17 GMT
  • மரத்தில் இருந்த தேன்கூட்டை சிலர் கல்லால் தாக்கி கலைத்ததாக தெரிகிறது.
  • வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர், வீரன் நகர், ஜெகனி கோட்டை தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது35). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.

இவர் மனைவி நளினி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெரியபாளையம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆட்டோவில் வந்தார். பின்னர் அவர்கள் வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டு இருந்தனர். அப்போது வெங்கல் அணைக்கட்டு பகுதிக்கு சென்ற அவர்கள் ஒரு மரத்தின் கீழ் சமைத்து சாப்பிட்டனர். அந்த நேரத்தில் அருகே உள்ள மரத்தில் இருந்த தேன்கூட்டை சிலர் கல்லால் தாக்கி கலைத்ததாக தெரிகிறது.

இதனால் பறந்து வந்த தேனீக்கள் மொத்தமாக சரவணன், அவரது மனைவி நளினி மற்றும் அவர்களது குழந்தைகளையும் விரட்டி, விரட்டி கொட்டியது. இதில் ஏராளமான தேனீக்கள் கொட்டியதால் சரவணனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News