உள்ளூர் செய்திகள்

கயிற்றால் சுற்றப்பட்டு கிணற்றில் கிடந்த வாலிபர் உடல்

Published On 2023-08-13 15:19 IST   |   Update On 2023-08-13 15:19:00 IST
  • கிணற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 47). இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று பார்வையிடுவதற்காக சென்றார். அப்போது அந்த கிணற்றில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதந்தது கிடந்தது.

இதுகுறித்து அவர் கல்லகுறுக்கி கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த தங்கராஜ் பார்வையிட்டு இதுகுறித்து மகாராஜா கடை போலீசாருக்கு புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த வாலிபரின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் உடலில் கயிறால் கட்டப்பட்டு மறுமுனையில் கல் ஒன்று கட்டப்பட்டிருந்தது என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை யாராவது கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றனரா? அல்லது வாலிபரே தனது உடலில் கயிற்றை கட்டி மறுமுனையில் கல்லை கட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மற்றொரு சம்பவம்

கந்திகுப்பம் அருகே சின்ன ஓரப்பம் கிராமத்தில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான 80 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது. தற்போது 30 அடியில் தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் இதுகுறித்து ஓரப்பம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனுக்கு தகவல் கொடுத்தார். அவர் இதுதொடர்பாக கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News