காய்கறிகளை ரேசன் கடையில் வழங்க மாதர் சங்கம் கோரிக்கை
- கடந்த இரண்டு மாதத்திற்கு முன் காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
- காய்கறிகளின் விலை சந்தையில் ஏற்றம், இறக்கத்தின் போது சராசரி விலை கிடைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தருமபுரி,
காய்கறி பொருட்களை ரேசன் கடையில், குறைந்த விலையில், குடும்ப அட்டை தாரருக்கு வழங்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதாவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் மோசமான கொள்கையே விலை உயர்வுக்கு காரணம். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
தக்காளி உள்ளிட்ட சிலகாய்களுக்கு உரிய கட்டுப்படியான விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே தக்காளியை அழித்தனர். தற்போது தக்காளி உயர்வுக்கு பருவநிலை ஒரு காரணமாக உள்ளது.
காய்கறிகளின் விலை சந்தையில் ஏற்றம், இறக்கத்தின் போது சராசரி விலை கிடைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு காய்கறிகள் விலை சராசரியாக கிடைக்க ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஜெயா, நகரசெயலாளர் நிர்மலாராணி, உள்ளிட்டா நிர்வாகிகளுடன் மனு கொடுத்தனர்.