உள்ளூர் செய்திகள்

தெப்பக்காட்டில் 200 வீடுகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி

Published On 2023-06-04 08:43 GMT   |   Update On 2023-06-04 08:43 GMT
  • தண்ணீர் சுத்திகரிப்பு கருவி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
  • பழங்குடியினர் வீடுகளில் பொருத்தப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கலெக்டர் பார்வையிட்டார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை கிராமத்தில் நீலகிரி ஆதிவாசி நல சங்கம் சார்பில் பாபா அணு ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்சாரம் இல்லாமல் குறைந்த விலையில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதனை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தெப்பக்காடு யானைகள் முகாம் கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாபா அணு ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பத்தில் தயாரான நீர் சுத்திகரிப்பு கருவிக்கான நண்ணீர் கிராம திட்டம்-2.0 வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-

தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைப்பாடி, தேக்குபாடி, கார்குடி, லைட்பாடி ஆகிய 4 கிராமங்களில் 350 வீடுகள் உள்ளன. அங்கு இதுவரை 200 வீடுகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.

இங்கு வசிக்கும் குழந்தைகளை பெற்றோர் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு இவர்களின் உயரம், எடை ஆகியை கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு தேவையான சத்துணவுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதனை பழங்குடி மகக்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மசினக்குடி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கலெக்டர் பார்வையிட்டார்.

அடுத்தபடியாக அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து நன்னீர் 1.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்திய பணிகள் குறித்த புகைப்படத்தை பார்வையிட்ட கலெக்டர் நன்னீர் கிராம திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கள இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) வெங்கடேஷ், கூடலூர் வனஅதிகாரி கொம்மு ஒம்காரம், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அண்ணாதுரை, குமார், நாவா தலைவர் சண்முகம், செயலாளர் ஆல்வாஷ், திட்ட அதிகாரி பூவிழி (நன்னீர் கிராமம்) நாவா பொருளாளர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News