உள்ளூர் செய்திகள்

பாளையில் 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டன்

Published On 2022-07-15 09:45 GMT   |   Update On 2022-07-15 09:45 GMT
  • பாளையில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் ராஜ்குமார் என்பவர் வார்டனாக பணியாற்றி வருகிறார்.
  • விடுதி வார்டன் ராஜ்குமார் இரவு நேரங்களில் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

நெல்லை:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்.

இவர் பாளையில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இந்த விடுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பரமக்குடி பகுதியை சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர் சேர்ந்தார். அவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த மாணவனுக்கு விடுதி வார்டன் ராஜ்குமார் இரவு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதற்கு மாணவன் உடன்படாததால் அவர், மாணவனை மூர்க்கத் தனமாக தாக்கி கடித்து வைத்துள்ளார். இதனால் காயமடைந்த மாணவர் பரமக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பற்றி மாணவனின் தந்தை பரமக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டனை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவம் நடந்தது பாளை விடுதி என்பதால் மாணவனின் தரப்பில் ஆன்லைன் மூலம் பாளை போலீஸ் நிலையத்துக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

அதன் பேரில் பாளை போலீசாரும் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விடுதி வார்டன் ராஜ்குமார் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News