கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
- பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்பட்டிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பி த்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட தொடங்கும்.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் வருகிற 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 20-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.
அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarshipschemes -யிலும் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.