உள்ளூர் செய்திகள்

வியாபாரியை ஓட ஓட வெட்டிய ரவுடி

Published On 2023-05-09 08:19 GMT   |   Update On 2023-05-09 08:19 GMT
  • வேலூர் பழைய மீன் மார்க்கெட்டில் தகராறு
  • போலீஸ் நிலையத்துக்குள் ஓடி உயிர் தப்பினார்

வேலூர்:

வேலூர் எஸ்.எஸ்.கே. மானியம் பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 26). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

வேலூர் கோட்டை பின்புறம் நவநீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் நேதாஜி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் இன்று காலை மார்க்கெட்டில் பலாப்பழம் அறுத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த திருமலைக்கும், சரவணனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை வெட்ட முயன்றார்.

இதனால் உயிருக்கு பயந்த சரவணன் திருமலையிடம் இருந்து தப்பி ஓடினார். இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற திருமலை பழைய மீன் மார்க்கெட் அருகே சரவணனை மடக்கிப் பிடித்து கத்தியால் கழுத்தில் குத்தினார்.

கத்திக்குத்தில் காயம் அடைந்த சரவணன் அங்கிருந்து தெற்கு போலீஸ் நிலையத்திற்கு ஓடினார். அங்கிருந்த போலீசார் திருமலையை மடக்கி பிடித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கத்திக்குத்தில் காயமடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டப் பகலில் வியாபாரி ஒருவரை ரவுடி ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News