உள்ளூர் செய்திகள்

ரேஸ் பைக்குகளை குறிவைத்து திருடிய கும்பல்

Published On 2022-08-26 16:21 IST   |   Update On 2022-08-26 16:21:00 IST
  • கோவை பகுதியில் விற்பனை செய்தது கண்டுபிடிப்பு
  • 3 பேர் கைது

வேலூர்:

காட்பாடி வி.ஜி ராவ் நகர் காந்தி நகர், கழிஞ்சூர், விஐடி பகுதிகளில் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் விலை உயர்ந்த ரேஸ் பைக்குகளை குறி வைத்து திருடி வந்தனர்.

இது தொடர்பாக புகாரின் பேரில் காட்பாடி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாலவெங்கட்ராமன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது ஒரே பைக்கில் வந்த 3 பேர் வந்தனர்.

அவர்கள் சேவூர் பகுதியை சேர்ந்த டேவிட்சன் (வயது 19) விருப்பாட்சி சேர்ந்த சிபிராஜ் (21) சத்துவாச்சாரி சேர்ந்த மதன் குமார் (20) என்பது தெரிய வந்தது.

சந்தேகத்தின் பேரில் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில் அவர்கள் காட்பாடி பகுதிகளில் பைக்குகளை திருடி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் பகல் நேரங்களில் மேஸ்திரி வேலைக்கு சென்று வந்தனர்.இரவு நேரங்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர்கள் மது குடித்து உல்லாசமாக இருக்க பணம் தேவைப்பட்டது. இதனால் விலை உயர்ந்த பைக்குகளை திருட முடிவு செய்தனர். வீடுகளில் முன்பு நிறுத்தப்பட்ட விலை உயர்ந்த ரேஸ் பைக் மட்டும் குறி வைத்து திருடியுள்ளனர்.

வேலூர் காட்பாடி பகுதியில் திருடப்பட்ட பைக்குகளை கோவைக்கு கொண்டு சென்று விற்பனையும் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 3 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News