குடியாத்தத்தில் காவல்துறை சார்பில் பள்ளி, கல்லூரி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் ஆலோசனை கூட்டம்.
பள்ளிகளில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
- தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
- கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியால் நடவடிக்கை
குடியாத்தம்:
வேலூர் சரக காவல்துறை டிஐஜி ஆனி விஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை கோட்டத்தில் உள்ள குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையம், குடியாத்தம் தாலுக போலீஸ் நிலையம், பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையம், கே.வி.குப்பம் காவல் நிலையம், பரதராமி காவல் நிலையம், மேல்பட்டி காவல் நிலையம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் சேர்ந்த தலைமை பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், பள்ளி கல்லூரி தாளாளர்கள், செயலாளர்கள், மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி கலந்து கொண்டு வருகை தந்து இருந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளி கல்லூரி நிர்வாகிகளுடன் பேசினார்.
அப்போது சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், மற்றும் விழுப்புரம் மாவட்டம், ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது
அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்தும், பள்ளியின் வராண்டாக்களில் இருந்து மாணவர்கள் குதித்து விடாமல் இருக்க இரும்பு கிரில்கள் பொருத்துவதன் அவசியம் குறித்தும் பேசினார்.
மாணவர்கள் மொட்டை மாடிக்குச் சென்று மொட்டை மாடியில் இருந்து குதித்து விடாமல் இருக்க மொட்டை மாடி கதவுகளை பூட்டி வைப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.
மேலும் பள்ளி மாணவர்கள் பஸ்சில் வரும்போது பள்ளிப் பஸ் டிவைர்கள் மற்றும் கண்டக்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாணவர்கள் கஞ்சா மற்றும் புகையிலை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதை கண்காணிக்கும் பொருட்டும், மாணவர்களுக்கு இடையே சாதி சம்பந்தமாகவோ மதம் சம்பந்தமாகவும் மோதல் ஏற்படுவது குறித்தும், எவ்வாறு அதனை தடுப்பது குறித்தும் பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டம் நடத்துவதன் அவசியம் குறித்தும் மேலும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் அடிக்கடி கலந்துரையாடல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.