உள்ளூர் செய்திகள்

லாங்கு பஜாரில் வாகனங்கள் நிறுத்தினால் ரூ.200 உடனடி அபராதம்

Published On 2022-08-27 16:42 IST   |   Update On 2022-08-27 16:42:00 IST
  • வேலூரில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
  • இன்று காலை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்பட்டது

வேலூர்:

வேலூர் நேதாஜி மார்க்கெட்டு ஒட்டி உள்ள லாங்கு பஜார் மண்டி தெரு பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் நடைபாதைகளில் கடைகள் வைத்துள்ளனர்.

இதனால் மார்க்கெட்டுக்கு வரும் வாகனங்கள் நெரிசலில் தவிக்கின்றன. விநாயகர் சதுர்த்தி நெருங்குவதை ஒட்டி மார்க்கெட் பகுதியில் தற்போது பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் லாங்குபஜாரில் நெரிசலை குறைத்து வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் போக்குவரத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டி தெரு மற்றும் லாங்குபஜார் பகுதியில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு உடனடி அபராதம் விதிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் இன்று காலை நேதாஜி மார்க்கெட் லாங்கு பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தினர். அந்த கடைகள் பழைய மீன் மார்க்கெட் வளாகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் லாங்கு பஜாரில் ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க அளிக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் வாகனங்கள் சென்றுவர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு உடனடியாக ரூ.200 அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் நின்று அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதனால் வாங்கு பஜார் பகுதி இன்று காலை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்பட்டது.

Tags:    

Similar News