உள்ளூர் செய்திகள்

ரூ.1.50 கோடி ஐம்பொன் சிலை செஞ்சி பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா?

Published On 2023-03-17 09:47 GMT   |   Update On 2023-03-17 09:47 GMT
  • சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை
  • வேலூர் அருகே கருவேப்பிலைக்குள் மறைத்து கடத்தியபோது சிக்கியது

வேலூர்:

திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (வயது 41), சோமாசிபாடி, புதுமை மாதா நகர், சர்ச் தெருவைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் (45) இவர்கள் இருவரும் கட்டை பையில் கருவேப்பிலைக்குள் மறைத்து ரூ.1.50 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்தி வந்தனர்.

வேலூர் அருகே உள்ள அரியூர் போலீசார் நடத்திய வாகன சோதனையில் இருவரும் பிடிபட்டனர்.

இதில், வின்சென்ட் ராஜ் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். திருவண்ணாமலையில் பிரபாகரன் என்பவரது வீட்டில் எலெக்ட்ரீஷியன் வேலைக்காக பள்ளம் தோண்டியபோது இந்த சிலை கிடைத்ததாக கூறியுள்ளார்.

அதை மலைக்கோடி பகுதியில் சுமார் ரூ.ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசி வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையுடன் அவர்கள் வேலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். ஙபின்னர் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் இருந்து சிலை கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News