உள்ளூர் செய்திகள்

பாலாற்று தண்ணீரில் அடித்து வரப்பட்ட ஆண் பிணம் மீட்பு

Published On 2022-12-26 10:31 GMT   |   Update On 2022-12-26 10:31 GMT
  • கொலை செய்து வீசப்பட்டாரா? விசாரணை
  • வலது கையில் பூமாலை, பெண்ணின் போட்டோ பச்சை குத்தப்பட்டுள்ளது

வேலூர்:

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வரக்கூடிய பழைய பாலாற்று பாலத்துக்கு அடியில் வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட ஆண் பிணம் சிக்கி இருந்தது.

இதனை கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

முதலில் வேலூர் தீயணைப்பு துறையினரை வரவழைத்து பிணத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டவருக்கு சுமார் 40 முதல் 50 வரை வயது வரை இருக்கும். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. பேண்ட் சட்டை அணிந்திருந்தார். வலது கையில் பூமாலை போட்டது போலவும் ஒரு பெண்ணின் போட்டோவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் போலீசார் பிணமாக கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது உடல் சிதைந்திருந்தது. வேலூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள தொலைவிலிருந்து உடல் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விரிஞ்சிபுரம் மற்றும் வேலூர் பகுதியில் ஆண்கள் யாராவது மாயமாகி உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News