உள்ளூர் செய்திகள்

ஜெயிலில் கைதிகளுக்கு கொசுவலை வழங்க சட்டமன்ற குழு பரிந்துரை

Published On 2022-07-26 15:01 IST   |   Update On 2022-07-26 15:01:00 IST
  • செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி
  • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக மேம்பாலம் கட்டுவதற்கான வரைபடத்தையும் பார்வையிட்டு ஆய்வு

வேலூர்:

தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில் சிந்தனைச் செல்வன், பிரகாஷ் வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகிய உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் நேற்று வேலூருக்கு வந்தனர். அவர்கள் சத்துவாச்சாரி பெருமுகை பாலாற்றில் பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.

வரைபடம் ஆய்வு

வேலூர் ஆவின் நிறுவனம் மற்றும் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலம் கட்டுவதற்கான வரைபடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வேலூர் கோட்டையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

இன்று காலையில் வேலூர் ஜெயிலுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கூறியதாவது

வேலூர் ஜெயிலில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.சிறைத்துறை சார்பாக சில புகார்கள் வந்துள்ளன. ஜெயிலில் மனித உரிமை நிலை நாட்ட வேண்டும். அங்குள்ள மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.

உணவு உறுதி செய்ய வேண்டும். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உணவு வழங்க பரிந்துரை செய்துள்ளோம்.

ஜெயிலில் டாக்டர் செவிலியர் பற்றாக்குறை உள்ளது.மேலும் இங்கு உள்ள கைதிகள் கொசுக்கடியால் அவதி அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு கொசு வலை வழங்க பரிந்துரை செய்துள்ளோம்.மற்ற ஜெயில் களை விட வேலூர் ஜெயில் தூய்மையாகவும் நன்றாக பராமரிக்கவும் செய்கிறார்கள்.

கைதிகள் மனம் திருந்தும் வகையில் ஜெயில் வளாகத்திற்குள் சில ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதனை கண்டு நெகிழ்ச்சி அடைந்தோம்.

சில தவறுகளால் வாழ்க்கையை தொலைத்து கைதிகளாக மாறி உள்ளவர்களுக்கு மனித உரிமை மீறக் கூடாது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News