பைக் மீது பஸ் மோதி குடியாத்தம் பெண் பலி
- தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் விசாரணை
வேலூர்:
சென்னையிலிருந்து வேலூர் நோக்கி இன்று காலை பைக்கில் 2 பெண்கள் வந்து கொண்டிருந்தனர்.ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அவர்களுக்கு பின்னால் கர்நாடகா மாநில தனியார் பஸ் வந்தது.
திடீரென அந்த பஸ் பெண்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். அங்கிருந்த பொதுமக்கள் இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலியானவர் குடியாத்தம் காளியம்மன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் வித்யா (வயது21) என்பதும், படுகாயமடைந்தவர் அவரது தாயார் பிரேமா (49) என்பது தெரியவந்தது.இந்த விபத்தில் தாய் கண்முன்னே மகள் பலியானார்.
படுகாயமடைந்த பிரேமாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான வித்யா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரங்காபுரத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.