வேலூர் ஜெயிலில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்த காட்சி.
வேலூர் ஜெயிலில் மனநிலை பாதிப்பு தடுக்க கைதிகளுக்கு விளையாட்டு, இசை பயிற்சி அவசியம்
- சட்டமன்ற குழுவினரிடம் பரிந்துரை
- சுமார் 960 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் ஜெயிலில் 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். உடல் நலக் குறைவு காரணமாக திடீரென கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதனை தடுக்க சிறைத்துறை நிர்வாகம் அடிக்கடி மருத்துவ முகாம் நடத்தி வருகிறது.ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் உள்ள மருத்துவமனையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க கைதிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அங்குள்ள கைதிகள் சுமார் 960 பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 சதவீதம் கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
ஜெயிலில் நேற்று சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்களிடம் வேலூர் ஜெயிலில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அதன் மூலம் நோய் பெற வாய்ப்பு உள்ளது. அதனால் கொசுவலை தர வேண்டும் என கைதிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தனி தனியாக கைதிகளுக்கு கொசுவலை கொடுத்தால் அதன் மூலம் அவர்கள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. ஜெயிலில் உள்ள கதவு ஜன்னல்களுக்கு மட்டும் கொசுவலை பொறுத்தலாம் என கூறியுள்ளனர்.
இதனை ஏற்று சட்டமன்ற குழுவினர் ஜெயில் கைதிகள் அறைகளில் உள்ள ஜன்னல் கதவுளுக்கு மட்டும் கொசுவலை பொருத்த பரிந்துரை செய்துள்ளனர்.
வேலூர் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு மனநிலை பாதிப்புகளை தடுக்க அவர்களுக்கு ஜெயில் வளாகத்தில் விளையாட்டு பயிற்சி அளிக்க வேண்டும். பேட்மிட்டன், இசை பயிற்சி மூலம் கைதிகளின் மனநிலை பாதிப்பை தடுக்க முடியும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் ஜெயிலில் இருந்து கைதிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படும் போது அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.இதனை தடுக்க ஜெயிலில் 108 ஆம்புலன்ஸ் போல அனைத்து வசதிகளும் கூடிய ஆம்புலன்சு வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.