சுவர் இடிந்து 2 பேர் பலியான ஓட்டல் இடிப்பு
- 90 ஆண்டுகள் பழமையானது
- கலெக்டர் உத்தரவு
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் 90 ஆண்டுகள் பழமையான ஓட்டல் ஒன்று இயங்கி வந்தது. கடந்த 18-ந் தேதி வேலூரில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் பழைய கட்டிட சுவர்களில் மழை நீர் இறங்கி நள்ளிரவில் ஓட்டலில் உள்ள சமையல் அறையின் சுவர் பாதி இடிந்து விழுந்தது.
காலை ஓட்டலில் திறந்து பார்த்த அதன் உரிமையாளர் இடிந்து விழுந்த சுவற்றின் ஈடிபாடுகளை அகற்ற முடிவு செய்தார்.
இதையடுத்து ராமமூர்த்தி (வயது 55) கட்டிட மேஸ்திரி. பவானி 60 மற்றும் வெண்ணிலா என 2 பெண் வேலையாட்களை அழைத்து வந்தார்.
3 பேரும் கட்டிட சுவற்றின் இடுப்பாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீதி இருந்த சமையலறையின் சுவர் திடீரென இடிந்து 3 பேர் மீது விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கி பவானி சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமமூர்த்தி மற்றும் வெண்ணிலாவை மீட்டனர்.
சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார். இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள பழமையான ஓட்டலை இடிக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் இன்று காலை ஓட்டலை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது.