ஆட்டை வெட்டி கூறு போட்டதாக இறைச்சியுடன் புகார்
- கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக வளர்த்து வந்தார்
- போலீசார் விசாரணை
குடியாத்தம் :
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40) விவசாயி. இவர் குடியாத்தம் உழவர் சந்தையில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் கடந்த ஓராண்டாக ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த ஆட்டை கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை முருகன் பார்த்த போது வீட்டில் இருந்த ஆடு காணவில்லை இதனையடுத்து அந்த கிராமப்பகுதியில் தேடியபோது அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் ஆட்டை வெட்டி கூறு போட்டுக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டுள்ளார்.
இதனையடுத்து முருகன் கூறுபோட்ட ஆட்டு இறைச்சி, ஆட்டுத்தலை உள்ளிட்டவைகளுடன் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தனது ஆட்டை கொன்று கூறுபோட்டதாக 3 பேர் மீது புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
குடியாத்தம் அருகே கிராமத்தில் ஆட்டை கூறுபோட்ட சம்பவத்தில் ஆட்டு இறைச்சி மற்றும் ஆட்டுதலை உடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.