உள்ளூர் செய்திகள்

வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய காட்சி. அருகில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, காந்தி, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மேயர் சுஜாதா மற்றும் பலர் உள்ளனர்.

காட்பாடி-சத்துவாச்சாரி இடையே மேம்பாலம் கட்டப்படும்

Published On 2022-06-30 10:43 GMT   |   Update On 2022-06-30 10:43 GMT
  • வேலூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
  • 24 பணிகள் ரூ.334 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் எ.வ.வேலு, காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வரவேற்றார். எம்.பி.கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், மேயர் சுஜாதா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு முடிவற்ற திட்டப்பணிகள், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், பல்வேறு துறைகள் வாரியாக நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என மொத்தம் ரூ.455 கோடியே 82 லட்சத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அவருக்கு அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாபு ஆகியோர் வெள்ளி செங்கோல்களையும், கதிர் ஆனந்த் எம்.பி. வெள்ளியிலான வீர வாள் வழங்கினர்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

வேலூர் வீரத்தின் அடையாளம். விவேகத்தின் அடையாளம் விடுதலை, நல்லிணக்கம் மற்றும் போர்க்களத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க வேலூரில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்டத்தின்அ மைச்சரும் பொதுச்செயலாளருமான துரைமுருகனை கலைஞர், பேராசிரியர் இடத்தில் வைத்து பார்க்கிறேன்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் பாடுபடும் அரசாக தி.மு.க. திகழ்கிறது. அதுதான் திராவிட மாடல் அரசு. இந்த மாடல் ஆட்சிதான் இந்தியா முழுவதும் வழிகாட்டும் அரசாக திகழ்கிறது. இந்த தருணத்தில் வேலூரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது அனைத்து தரப்பினரையும் பாராட்டுகிறேன்.

ஓராண்டில் வேலூர் மாவட்டத்திற்கு செய்த திட்டங்கள் என்ன என்று அதிகாரியிடம் கேட்டேன் அப்போது ஒரு புத்தகம் கையில் கொடுத்தார்கள் அந்த அளவிற்கு வேலூருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்ப ட்டுள்ளன இதை செய்ததால் தான் தற்போது உங்கள் முன்பு கம்பீரமாக நிற்கிறேன். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.963 கோடியில் 52 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 24 பணிகள் ரூ.334 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர் பேருராட்சியில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பேரணாம்பட்டு சாலை பணியும் நடைபெற்று வருகிறது.

வடுங்கதாங்கல் பகுதியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் ரெயில்வெ பாலம் கட்டப்பட்டுள்ளது. 12 புதிய பால் உற்பதியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் 704 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.61 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. 7,340 அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பில் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டு மனை

வேலூர் மாவட்டத்தில் 4,467 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 16 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ50 லட்சம் மூல நிதி வழங்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் திட்டத்தின் மூலம் 7,897 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12,415 தகுதிவாய்ந்த நபர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். 1,915 உழவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. பல ஹெக்டேர் கணக்கில் ஆக்கிரமிப்பு நிலங்கள் அற்றப்பட்டுள்ளது.

அகரம் ஆற்றின் குறுக்கே கோவிந்தம்பாடி கிராமத்தில் தடுப்பணை, பாலாற்றின் குறுக்கே பொய்கை கிராமத்தில் தடுப்பணை, சேண்பாக்கத்தில் தரைகீழ் தடுப்பணை,

பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட குகையநல்லூரில் கிராமத்தில் தடுப்பணை என ரூ.58 கோடி மதிப்பீட்டில் கட்டும்பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் 9 ஏரிகளை புணரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மலை கிராமத்திற்கு தார்சாலை, தொரப்பாடி, பத்திலப்பல்லியில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

நீர்வளத்துறை அமைச்சர் கேட்டதற்காக காட்பாடி மகிமண்டலத்தில் 300 ஏக்கரில் சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

மேல்மொணவூர், அப்துல்லாபுரம் கிராம பகுதியில் 5 ஏக்கரில் டைடல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடியாத்தம்

குடியாத்தம் புறவழிச்சாலை 7 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.228 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

வேலூர் வட்டச் சாலை 9 கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.328 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தற்போது நில எடுப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

வேலூர்

வேலூர் புறவழிச்சாலை சுமார் ரூ.220 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

காட்பாடி காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரி பகுதிக்கு பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

காட்பாடி சேர்க்காட்டில் 6 ஏக்கரில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். அங்கு 6 ஏக்கரில் புதிய அரசு கலை கல்லூரியும் கட்டப்படும்.

வல்லம் மற்றும் கீழ்பள்ளிக்குப்பம் இடையே ரெயில்வே மேம்பாலம் ரூ.181 கோடியில் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News